Thursday, 5 April 2012

நீயே கடவுள்



நித்தமும் தொழுதோம் 
நிதர்சனமும் கண்டோம் 
கனியமுதும் படைத்தோம் 
தமிழ்ச்சுவையும் சேர்த்தே !


பற்றுதனை கொண்டோம் 
முற்றிலுமாய் உன் மீதே 
கற்று உனை அறியவே 
கடுந்தொலைவு கடந்தோம் !

கச்சிதமாய் உனைக் கண்டு 
காவியம் தனை படைத்திடவே
பார் முழுதும் பறந்தோம் 
பரிதவித்தே நின்றோம் !

காண்கர்கரிய சிற்பமாய் 
கற்பனையிலே சிறப்பாய் 
கண்மூடி உனைக் கண்டோம் 
கண் திறந்தால் - வெற்றிடம் வெறும்பியதே !

முக்குலத்தோர் முதல் இக்குலத்தோர் வரை 
கடுந்தவம் இருந்தும்-உனைக் 
கண்டொளிக்கவும் இல்லை-தனை 
விட்டொழிக்கவும் இல்லை !

இதிகாசத்திலும், கவிச்சோலைகளிலும்
பரந்தாமனாய், பார் போற்றும் வள்ளலாய் 
புரட்சித்தலைவனாய் , புஜ பல பராக்கிரமனாய்த் தோன்றியவனே
உனைப்  புரியாமலேயே  கடந்தோம் !

எங்கெல்லாம் அதர்மம் தழைக்கின்றதோ-அங்கெல்லாம்
தனை  அழிக்க தோன்றவுமில்லை , மனைக் காத்தருளவுமில்லை
 பார் போற்றும் பாரதியே 
நிற்பதும் , நடப்பதும் , பறப்பதும் மட்டுமே மாயையோ!

என் இன மக்கள் பிளவுண்டு வாழவும் , பிறர்தனை  வதைக்கவும் 
முழுமுதற் பொருளாகவும் கர்த்தாவாகவும் இருக்கும் உனை 
வீணாய் தினம் தொழுகின்றனர் 
நீயே கதி என்று இருகின்றனர் !

எல்லாமாய் இருப்பவனே 
 யாவரும் தொழுபவனே 
பண்டைய போரில் , வில் அம்புகளும் வாள்களும் 
உனைப் பதம் பார்க்காமல் நீ பிழைத்திருக்கலாம் 

ஆனால் இக்கணமோ ,
ஐயாயிரம் கல் தொலைவில் இருந்தாலும் 
துல்லியமாய் உனைத்தாக்கிடவே பார்த்திபன் பலர் இருக்கின்றனர்  !
அதனாலேயோ நீ வர மறுக்கின்றாய் !

 அட ! 
புரியாத புதிராய் இருப்பவனே 
உனைப் புரிந்தே விட்டேன் நானே !

மட மாந்தர்களே  !

அவன் இருக்கின்றான் 
ஆனால் அவனோ இல்லை 
புத்தியும் இருந்தும் புரியாமல் இருக்கின்றீரே 

இத்தனைக் கற்றும் , இத்தனைப் பெற்றும் 
முற்றும் உனை அறியாமல் 
கல்லைக் கடவுள் என்கிறீரே !

கடவுள் என்று எவரும் இல்லை
ஆனால் அதன் தன்மை மட்டும் 
தரணி எங்கும் அமுதாய் தழுவுகின்றது 

அது உன்னிடமும் இருக்கின்றது 
அது உன்னிடமே இருக்கின்றது 
அதை அள்ளித் தெளித்தால் 

            "" நீயே கடவுள் "" 


                                                                 ~shavin earthy 
    

No comments:

Post a Comment